Thursday, 24 May 2012

நம்பிக்கை



நட்டு வைத்த நாற்றுகளுக்கு
நீர் பாசனம் வேண்டி
மழை பெய்ய
காத்திருந்தான் விவசாயி....

அறுவடை பணத்தில்
வீட்டிற்க்கு அரிசி வாங்கவும்
பிள்ளையின் பள்ளி
கட்டணத்தை கட்டவும்
எண்ணமுண்டு....

கருத்த மேகத்தை பார்த்து
புன்னகை தவழ்ந்தது...
அடித்த ஆடி காற்றில்
மேகமும் கலைந்து
கவலையும் தொற்றிகொண்டது....

ஏமாற்றத்துடன் வீடு
திரும்பியவனிடம்
வருண பகவானை
வேண்டுவோம் என்றான் பிள்ளை...
மகனின் நம்பிக்கை
புத்துணர்ச்சி தந்தது
அவனுள் மழை வருமென்று....

நண்பர்கள்



பள்ளி கால நண்பர்கள்
அலுவலக பணியின்
தீவிரத்தில் காணாமல் போனார்கள்....

கல்லூரி காதல்
திருமணத்துக்குப்பின்
மறந்துபோனது....

வீடு அலுவலகமென்று
அன்றாட இயந்திர
வாழ்க்கை பழகிப்போனது....

அன்று அப்பாவின் திட்டு
நினைவுக்கு வந்தது
பொறுப்பற்று நண்பர்களுடன்
ஊர் சுற்றுகிறான் என்று...
நாங்கள் இன்றைய இளைஞர்கள்....

உறவுகள்



கண்டதும் பல
உறவு பெயர்களில்
அழைத்தார்கள்...
ஆனாலும் இவர்கள்
ரத்தத்தால் வந்த
உறவுகள் அல்ல...
கண்டப்பின் நம்மோடு
உறவாகிப்போனவர்கள்....

இவர்களை
பெற்றவர் யாராயினும்
வளர்வது ஓரிடத்தில்....

இவர்களிடம்
ஜாதி மதங்களை கடந்த
உறவும் பாசமும் நட்பும் தெரிந்தது....

பண்டிகைகள் எல்லாம்
சிறப்பாகின்றன இவர்கள்
கொண்டாடுவதால்....

இவர்கள் அனைவரோடும்
ஒரு வேளை
உணவு உண்டது
வாழ்கையில் செலவு
செய்த பணத்திற்கு
முதன் முதலாக
கிடைத்த சந்தோஷம்....

பிரியும்போது
தோன்றியது என்னுள்
இவர்கள் அனாதைகள்
அல்ல என்று
உறவாக நாமிருக்கும்போது....

வாழ்க்கை பாதை






கடந்து வந்த
வாழ்க்கை பாதையை
பின்னோக்கி பார்க்கிறேன்
நரைத்த தலையோடும்
தளர்ந்த உடலோடும்....

வெகு தொலைவில்
நீ தெரிகிறாய்
நாம் பிரிந்த
இளைமை காலத்தில்....

திரும்பவும் இளமையோடு
உன் கரம் பிடித்து
வாழ்க்கை பாதையை
கடக்க ஆசை....

ஆனாலும் ஒருவழி
பாதையாய் போய்விட்டது
இந்த வாழ்க்கை பயணம்
நாம் சேர வழி இல்லாமல்....

குழந்தை

உறக்கம் வர
அம்மாவிடம் கதை
கூறச்சொல்லி
படுத்து கேட்டுக்கொண்டிருந்தாள்
பிஞ்சுக் குழந்தை...
மறுநாள் பொம்மையை
அணைத்தபடி தான் கேட்ட
கதையை கூறிக்கொண்டிருந்தாள்
அந்த பொம்மையை
உறங்கச்சொல்லி....

*********************************************

வெளியில் கிளம்பிய
என்னை பார்த்து அழுத
குழந்தையை
சமாதானப்படுத்த
வீடு திரும்பும்பொழுது
மிட்டாய் வாங்கி வருகிறேன்
என்றேன்...
திருமணநாள் அன்று
கோவிலுக்கு அழைத்து செல்லாமல்
வீட்டிற்கு நேரம் கழித்து
வந்த என்னை பார்த்து
சிணுங்கிய மனைவியிடம்
அப்பா மிட்டாய் வாங்கி
வந்திருப்பார்
அழுகாதே என்றது
குழந்தை....
***************************************************

அம்மாவை பிடிக்குமா
அப்பாவை பிடிக்குமா
என்று கேட்டேன்
குழந்தையிடம்...
தன்னோடு எப்பொழுதும்
இருக்கும் கரடி பொம்மையை
தான் பிடிக்கும் என்று
கட்டிக்கொண்டது குழந்தை...
அலுவலகத்திலிருந்து திரும்பிய
எங்கள் இருவருக்கும்
சுரீரென்றது....

கடிதம்


 
நீல நிற காகிதமொன்றில்
தன் உள்ளத்தில் உள்ள
அன்பு வார்த்தைகளை கொட்டி
உறவுகளுக்கும்
நண்பர்களுக்கும்
அன்புள்ள என்று ஆரம்பித்து
அன்புடன் என்று முடிக்கும்
கடிதம் மிக அழகு....

அழகிய கிறுக்கலான
கை எழுத்துடன் தன்
கைப்பட எழுதும் கடிதம்
உணர்வுகளின் வெளிப்பாடு....

அன்பு அம்மாவிற்கும்
காதல் மனைவிக்கும்
பாசத் தங்கைக்கும்
உயிர் நண்பர்களுக்கும்
உறவுகளுக்கும்
எழுதும் கடிதம்
அன்பின் வெளிப்பாடு....

நவீன உலகில்
மனித இயந்திர
வாழ்க்கையில் கடிதம்
மறந்து மின்னஞ்சலாகிவிட்டன....

தொலைந்தது கடிதம்
மட்டுமல்ல
மனித உறவுகளுக்கு
இடையே உண்டான
அன்பும் பாசமும் தான்....

பதறிக் கொண்டிருக்கிறது இதயம்


இடது கண் துடித்துக் கொண்டிருக்கிறது
சகுனம் சரியில்லையென்றாள் ஒருத்தி
சத்துக் குறைவென்றாள் இன்னொருத்தி
’தூங்கினால் தானே’ அலுத்துக் கொண்டாள்
மற்றொருத்தி!
’கண்ணுக்கு மூக்குக் கண்ணாடியிடு’
சிரிப்பலைகள் பரவி ஓய்ந்தன.

தோழிகளின் சீண்டல்களைப் போலவே
நிற்காமல் துடித்துக் கொண்டிருக்கிறது
தாழிடாமலும்
முற்றிலும் திறந்திடாமலும்
காற்றில் அல்லாடும் கதவுபோல
இமைகளோடு இடது கண்!

அதே லயத்தில் 
பார்வையில் பருகிய உன்னை
பத்திரப்படுத்தவா வேண்டாமா
பதறிக் கொண்டிருக்கிறது இதயம்

Sunday, 22 April 2012


ஈழத்து பெண் போராளிகளின் வீரத்தை பார்த்து உலகமே வியந்தது ...

muthuvaduganathar, maruthu sagotharargal



வீரமும் திறமையும் 


சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதர் தேர்ந்த வீரமும், பண்பும், சிறந்த பக்தியும் , 

மக்கள் நலம் பேணும் குணமும் கொண்டு நாட்டை ஆண்டு வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் பஞ்சமின்றி, பயமின்றி வளமுடன் நாட்டு மக்கள் வாழ்ந்து வந்தனர். வேலு நாச்சியாரோ சிறந்த பக்தை, போர் பயிற்சி பெற்றவர். பலமொழிகளைக் கற்றவர். இலக்கிய புலமை பெற்றவர், ஆங்கிலம் அறிந்தவர். மதிநுட்பமிக்கவர். மன்னருக்கு சிறந்த அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தார். வனப்பகுதிகள் நிறைந்து அரணாக நின்ற காளையார் கோவிலில் தான் கோட்டையும் இதற்கு ஒரே ஒரு கோட்டை வாயில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அரசர் முத்துவடுகநாதத் தேவர் இந்த காளையார் கோவில் காட்டில் தான் வேட்டையாடும் பழக்கம் உள்ளவர். அந்த மாதிரி ஒரு வேட்டைக்குச் செல்லும் பொழுது மருது சகோதரர்களும் உடன் அழைத்துச் செல்லப்பட்டனர். பல மிருகங்களை வேட்டையாடிக் கொன்றனர். வேங்கை ஒன்று அரசர் மீது பாய்ந்தது , சின்ன மருதுகுறுக்கில் பாய்ந்து வேங்கையுடன் கட்டிப் புரண்டார். சின்ன மருதுவின் தாக்குதலால் வேங்கைப்புலி புதர் மறைவில் ஓடி மறைந்தது. அடிப்பட்ட புலி சும்மா இருக்காது என்பதை உணர்ந்த பெரிய மருது சமயம் பார்த்திருந்தார். திடீரென வேங்கையின் வாலைப் பிடித்திழுத்து தலைக்குமேல் சுழற்றி தரையில் ஓங்கி அடித்தார் பெரிய மருது. பிறகு அதன் வாயைப் பிளந்து கொன்றார். அந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் புலியடி தம்மம் என்று இன்று அழைக்கப்பட்டு வருகிறது. இதில் நெகிழ்ந்து போன அரசர் சிறுவயல் என்ற கிராமத்தை பெரிய மருதுவிற்கும் புலியடி தம்மம் என்ற கிராமத்தை சின்ன மருதுவிற்கும் அளித்து பெருமை செய்தார். இவர்கள் அந்தந்த பகுதியில் சமீன்தார்களாக 1769 ஆண்டில் இருந்தனர். அந்தச் சமயத்தில் தான் சருகணி மாதா கோவிலுக்கு பெரிய மருது சமீன்தார் என்ற முறையில் தேர் ஒன்றை வழங்கியதாகச் செய்தி உள்ளது. இந்த நிலையில் தான் பிரதாணி தாண்டவராயப் பிள்ளை மற்றும் தளபதி சுவப்பிரமணியத் தேவர் ஆகியோர்கள் வயது முதிர்ந்தனர். அவர்களிடம் பயிற்சி பெற்ற பெரிய மருதுவை தளபதியாகவும் ,மதிநுடட்பம் நிறைந்த சின்னமருதுவை அமைச்சராகவும் அரசர் முத்து வடுகநாதர் நியமித்தார். அரசி வேலு நாச்சியருக்கு சிறந்த முறையில் போர் பயிற்சியைத் தந்தவர் சின்ன மருதாவார்.

முத்து வடுகநாதரின் இறப்பும் அரசி வேலு நாச்சியாரின் பரிதவிப்பும்

சேது நாட்டரசர் விசயரகுநாத சேதுபதி 1762ல் காலமானார். அவரது சகோதரியுடன் 2 வயது மகன் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தப்பட்டான். முத்துவை நாட்சியார் தளபதி வெள்ளையன் சேர்வை, அமைச்சர் தாமோதரன் பிள்ளை ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் சேது நாட்டின் ஆட்சி நடந்து வந்தது.

இதற்கிடையில் தளபதி காலமானார். தாமோதரன் பிள்ளை, தஞ்சை மன்னன் 1770ம் ஆண்டு சேது நாட்டுடன் போர் தொடுத்ததில் போர்காலத்தில் கொல்லப்பட்டார். சேது நாடு தஞ்சை மன்னன் வசமானது. தஞ்சை மன்னன் இவ்வாறு போர்தொடுத்து சேது நாட்டை தனதாட்சியின் கீழ் கொண்டு வந்ததை வெறுத்து நேரம் பார்த்திருந்தான். ஓராண்டு கழித்து ஆங்கிலேய தளபதி ஜோசப் சுமித் என்பவன் தலைமையில் தனது படையுடன் தஞ்சை மீது போர் தொடுத்தது. ஈடுகொடுக்கமுடியாத தஞ்சை மன்னன் ஆர்காட்டு நவாப்பிற்கு கப்பம் கட்டவும் பிடிப்பட்ட சேது நாட்டுப் பகுதிகைளத் திருப்பித் தரவும் ஒத்துக் கொண்டான். அதற்கு அடுத்த ஆண்டில் ஜோசப் சுமித் நவாப்பின் படை, புதுக் கோட்டைத் தொண்டைமான் படை உதவிஞடன் இராமநாதபுரத்தை முற்றுகையிட்டு வெற்றி கொண்டான். அரச குடும்ப வாரிசுகளைச் சிரைப்படுத்தி திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு சென்றான். அதன் பிறகு மீதமிருந்த சிவகங்கைச் சீமையைக் கைப்பற்ற நவாப்பு விரும்பினான். இதை சூழ்ச்சி முறையில் செய்து முடிக்க திட்டமிட்டான். ஏனெனில் ஆரக்காட்டு நவாபுடன் நட்புடன் அரசர் முத்துவடுகநாதர் இருந்து வந்தார்.

வஞ்சகத் திட்டம் ஒன்றை நாவபு தீட்டினான். இதையறியாத நிலையில் அரசர் முத்துவடுகநாதர் தனது இளைய ராணியுடன் காளையார் கோவில் காட்டிற்கு வெட்டையாடச் செல்கிறார் . ராணிவேலுநாட்சியார் கர்ப்பிணியாக இருந்ததால் கொல்லங்குடியில் தங்குகிறார். அன்றைய தினத்தில் நவாப்பின் படை கர்நாடக பட்டாளியனுடன் மங்கலம் நோக்கி வருவதாக ஒற்றன் மூலம் செய்தியறிந்த பெரிய மருது மங்கலம் சென்று அப்படைகளுடன் போரை எதிர் கொள்கிறார். இதனால் வெற்றி கிட்டாது என்பதை அறிந்து கொண்ட நவாப்பு மற்றொரு பிரிவு படையை கயவன் ஒருவன் உதவியுடன் குறுக்கு வழியில் காளையார் கோவில் கோட்டையை முற்றுகையிடுகிறான். நடு இரவில் இந்த படையெடுப்பை கோட்டை வீர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். உறக்கத்திலிருந்த அரசர் முத்துவடுகநாதர் எழுந்து சீறிப் பாய்ந்து போரிடுகிறார். வஞ்சகத்தால் ஏற்பட்ட போரில் அவரும் அவரது இளைய ராணியும் கொள்ளப்படுகின்றனர். உயிர் சேதம் அதிகம். சின்னமருதுவை இச்செய்தி திகைக்க வைக்கிறது. உடனே கொல்லன் குடியில் தங்கியிருந்த வேலுநாட்சியாரைக்காப்பற்ற துரித நடவடிக்கை மேற்கொண்டார் மங்கலத்தில் போர் செய்துக் கொண்டிருந்த பெரிய மருதுவும் , வேலு நாச்சியாரைக் காப்பாற்றவும் சிவகங்கைச் சீமையைக் கைப்பற்றவும் ஆலோசனை செய்கின்றனர். முதலில் அரசியைக் காப்பற்றவேண்டும். பிறகு ஆங்காங்கே இரகசியமாக படைதிரட்டி நாட்டைப் பிடிப்பது என்று முடிவு செய்கின்றனர். அதற்கு ஒரே வழி திண்டுக்கல் விருப்பாட்சியில் உள்ள நண்பர் ஹைதர்அலியுடன் பாதுகாப்பைக் கோருவதென்று விருப்பாச்சிக்கு இரவோடு இரவாக காட்டு வழியில் சென்று ஹைதர்அலியைச் சந்தித்து நடந்தவற்றை எடுத்துச் சொல்கின்றனர். பதட்டமும் கோபமும் கொண்ட ஹைதர்அலி வேலுநாச்சியாரை தனது சகோதரியாக்கி பாசத்துடன் பாதுகாப்பு வழங்கினார். பெரிய மருதுவும் சின்ன மருதுவும் சிறிது இளைப்பாருதலுக்கு பின்பு இரகசியமாக படைத்திரட்டும் பணிக்கு சிவகங்கை கிராமங்களை நோக்கி புறப்பட்டனர். 1772 முதல் 1780 வரை மறைவு வாழ்க்க நடத்தும் நிலை ஏற்பட்டது. அதற்காக அரசிவேலு நாச்சியார் பட்ட மனவேதனைகள் பல. விருப்பாட்சியில் தங்கி இருந்த பொழுது தான் ஒரு பெண் மகவை அரசி பெற்றெடுத்தார். வெள்ளட்சி என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஒரு சகோதரன் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசிக்கு ஹைதர்அலி செய்து கொடுத்தார்.

இந்த காலக் கட்டத்தில் மருது சகோதரர்களின் திட்டம் 3

விருப்பாட்சியில் ஹைதர்அலியின் பாது காப்பில் அரசி வேலுநாச்சியாரை வைத்த மருது சகோதரர்கள் ஆரக்காடு நாவப்பிற்கும், கும்பினியார்களுக்கும் எதிராக தீவிரவாதப் படைகளைத் திரட்டும் பொருட்டு செயல்திட்டம் ஒன்றை ஹைதர்அலியடன் கலந்தாலோசித்து முடிவு செய்தனர். அத்திட்டப்படி தெற்கே உள்ள பாளையக்காரர்களை வீரபாண்டிய கட்ட பொம்மன் தலைமையில் தூத்துக்குடி வரை ஒன்றுபடுத்தி நவாப்பிற்கும் கும்பினியார்களுக்கும் எதிராகச் செய்லபடுத்துவது என்ற முடிவாகியது. சிவகங்கை சீமை மக்களை அங்குள்ள காட்டுப் பகுதியில் ஆங்காங்கே கும்பினியர்களுக்கு எதிராக தீவிரவாதத்தை அளிப்பது என்றும் முடிவாயிற்று. இதற்கு தனது பங்கிற்கு படை வீரர்களையும் குதிரைகளையும் வேண்டும் பொழுது தருவதாக ஹைதர்அலி உறுதியளித்தார். இது அவரது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தியது.
இதனை செயல் திட்டமாக்க ஹைதர்அலி விருந்துஒன்றுக்குஏற்பாடு செய்து அதில் ஊமத்துரையை கலந்து கொள்ள வைத்தான். மருதுவைப் போன்ற மதிநுட்பமும், வீரமும் கொண்ட ஊமைத்துரையும் சின்னமருதுவும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நண்பர்களாயினர். விருந்திற்கு பிறகு மருது சகோதரர்கள் சிவகங்கை காட்டுப் பகுதி கிராமங்களில் செயல்பட்டு வந்த கும்பினியர் எதிர்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க உடன் புறப்பட்டனர். மருது சகோதரர்கள் தாம் சாதரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் கீழ் மட்ட மக்களின் மனதைக் கவர்ந்து அவர்களைத் தங்கள் செயல்திட்டத்திற்கு ஆட்கொள்வதில் எளிதில் வெற்றி கண்டனர். காட்டுப் பகுதியில் ஆயுதம் தயாரிக்கும் பட்டறைகளை நிறுவினர். சிறந்த வீர்களைத் தேர்ந்தெடுத்துப் போர் பயிற்சி அளித்தனர். உளவுப் படை வீர்களைத் தயார் செய்து நவாப், தொண்டைமான், கும்பினியர் ஆகியோர்களின் போர் நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிந்து கொண்டு செயல்பட்டனர். மருதுசகோதரர்களோ மக்களோடு மக்களாக ஒன்றாகக் கலந்து செயல்பட்டதால் மக்களும் உற்சாகத்துடன் நாட்டை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மக்களின் இந்த நிலை ஏனைய பாளையங்களிலோ, அரசாட்சிகளிலோ இல்லை எனலாம்
Tamilians in China..! Proud to be a Tamilian..!

This Tamil Language inscription was found in China. It was found about 500 miles north of Canton, in a place called Chuan Chou.
 This is a port
city. It was an important port city in the ancient times.

Tamil Eelam

 



 

Friday, 13 April 2012

வானில் ஒரு விடிவெள்ளி!






நிசப்தத்தை தன்னுள் அடக்கிய நீண்ட  இரவு.  1930 -ஆம் ஆண்டு. அந்தக் கப்பல் நடுக் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் அந்த இளைஞன். மெல்ல எழுந்து கப்பலின் மேல் தளத்துக்குச் சென்றான். வானமும், கடலும் கறுமை பூசியிருந்த அந்த நள்ளிரவில் அவன் மட்டுமே தனியாக...

மனதில் பலவிதச் சிந்தனைகள், குழப்பங்கள். கடல் காற்று உடலைத் துளைத்தது.

‘இங்கிலாந்துக்குப் புறப்பட்டது தவறோ?!’  - நூறாவது முறையாக கேள்வி கேட்டது மனம்.

அம்மாவின் அன்பு முகம் மனதில் நிழலாடியது. பாதிக் கடல் தாண்டியாயிற்று. இனி இந்தியாவுக்குத் திரும்பிப் போவது சாத்தியமில்லை. துணிந்தாகிவிட்டது. இனி துவண்டு பிரயோஜனமில்லை. இங்கிலாந்து சென்று படித்துவிட்டுத் திரும்புவதற்குள் அம்மா உயிரோடு இருப்பார் என்பது நிச்சயமில்லை. மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கும் தாயைவிட, வெளிநாட்டுப் படிப்பு முக்கியமா?

அப்பாவும், சகோதர, சகோதரிகளும் தயங்கிய நேரத்தில் அம்மா துணிச்சலாக முடிவெடுத்தார்.

‘இந்த உலகத்துக்காகப் பிறந்தவன் இவன். எனக்காகப் பிறந்தவன் அல்ல. இப்போதே இவன் லண்டனுக்குப் புறப்படட்டும்!’

அம்மாவின் உறுதிக்கு முன்பு, மற்றவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. இதோ, அம்மாவிடம் விடைபெற்று பயணத்தையும் தொடங்கியாயிற்று.

அவனுக்குக் கிடைத்துபோல் ஒரு தாய் வேறு யாருக்குக் கிடைப்பார்?

அப்பா சுப்பிரமணியன், அரசு அதிகாரி. ஆரம்பக் கல்வியை அவனுக்கும் அவனது சகோதர சகோதரிகளுக்கும் அம்மா சீதாலட்சுமிதான் கற்பித்தார். தமிழும், ஆங்கிலமும் அவனுக்கு அப்போதுதான் பரிச்சயமாயின. அம்மா மிகச் சிறந்த அறிவாளி. அந்தக் காலத்திலேயே ஹென்ரிக் இப்சனின் ‘எ டால் ஹவுஸ்’  புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அப்பாவுக்கு இசையிலும் நல்ல தேர்ச்சியிருந்தது.  இசை பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

இப்படிப்பட்ட அற்புதமான சூழ்நிலையில்தான் அவன் வளர்ந்தான். அப்பாவின் பணி நிமித்தமாக, சென்னைக்கு குடும்பத்துடன் அவர்கள் குடிபெயர்ந்தனர். திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பு, மாநிலக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பை   முடித்தான்.

பள்ளியில் படிக்கும்போதே அவன் அதி புத்திசாலி.கல்லூரியில் இயற்பியல், கணிதம், வேதியியல், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் போன்றவற்றைப் படித்தான். அதிலும், இயற்பியலும், கணிதமும் அவனுக்கு இரு கண்கள். ‘கணக்குப் புலி’ என்று ஆசிரியர்கள் அவனை செல்லமாய் அழைப்பார்கள்.

மாநிலக் கல்லூரியிலும் அவனது திறமையைப் பற்றி பேராசிரியர்கள் வியந்து பேசிக் கொண்டார்கள். இயற்பியலில் பி.எஸ்சி. ஆனர்ஸ் படித்திருந்தான். எல்லாப் பாடங்களிலுமே முதலாவதாக வந்ததால், அவன் விருப்பத்திற்கேற்ப வகுப்பிற்கு வந்தால் போதும் என்று சிறப்புச் சலுகை வேறு.  அது போதுமே! நூல் நிலையம் சென்று நிறையப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தான்.

அப்படி அவன் படித்த ஒரு புத்தகம்தான் ஜெர்மன் நாட்டு விஞ்ஞானி  சம்மர் ஃபீல்டு எழுதிய, அணுக்களின் அமைப்பு பற்றிய புத்தகம். ஃபீல்டை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பும் அவனுக்கு எதிர்பாராமல்  வாய்த்தது. சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் தத்துவங்கள் பற்றி சொற்பொழிவாற்ற ஒரு முறை வந்திருந்தார் அவர். அதனால் அவருடன் நெருங்கிப் பழக முடிந்தது.

கல்லூரி வாழ்க்கையை வெறும் பொழுதுபோக்காகக் கழிக்கவில்லை அவன். மாணவனாக இருந்தபோதே, தன்னுடைய 19-வது வயதிலேயே லண்டனிலுள்ள ராயல் சொசைட்டிக்கு அறிவியல் கட்டுரை ஒன்றை அனுப்பி வைத்தான். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஃபவுலருக்கு தன் ஆராய்ச்சிக் கட்டுரை பற்றிக் கடிதமும் அனுப்பியிருந்தான்.  இயற்பியலில் அவனுக்கு ஒரு முன்னோடி, அவன் குடும்பத்திலேயே இருந்தார். அவர்தான் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன். ஆம். ராமன், அவனது பெரியப்பா மகன்தான்.

அவன் கல்லூரி மாணவனாக இருந்தபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. சென்னையில் 1929-ல் இந்திய விஞ்ஞானிகள் மாநாடு. அப்போது அவனும் தனது விஞ்ஞானக் கட்டுரைகளைப் படித்தான். அங்கிருந்த அறிஞர்கள் எல்லோருமே அவனை வெகுவாகப் பாராட்டினார்கள். அந்த மாநாட்டுக்கு யார் தலைவர் தெரியுமா? சர் சி.வி.ராமன்தான்.

கல்லூரிப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அவனைத் தேடி வந்தது, இந்திய அரசின் சிறப்பு உதவித்தொகை. இங்கிலாந்து சென்று படிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் இந்திய அரசு அளிக்கும் இதுபோன்ற உதவித்தொகை அவ்வளவு சீக்கிரத்தில் யாருக்கும் கிடைக்காது.

இடையில் அம்மாவின் உடல் நலம் மோசமடைந்து விட்டது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்றுதான் அவன் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். கப்பலில் ஏறும் வரை அவனது பயணம் நிச்சயமில்லாததாகவே இருந்தது.

அவனைவிட அவன் அம்மாவுக்குத்தான் இதில் ஆர்வம் அதிகம். தன் மகன் இங்கிலாந்து சென்று படித்துப் புகழ்பெறவேண்டும் என்பதே அந்தத் தாயின் ஆசை.

எல்லாம் கூடி வந்ததும், இதோ, இப்போது கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.

மேலே வானத்தை அண்ணாந்து பார்த்தான். கும்மிருட்டு. ‘பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல் வயிரம்’  என ஆங்காங்கே நட்சத்திரங்கள் கண் சிமிட்டின. விண்மீன்களைப் பார்த்ததும் அவனது ஆராய்ச்சி மனம் விழித்துக் கொண்டது.

நட்சத்திரங்கள் எப்படித் தோன்றுகின்றன?  அவை எப்படி வளர்கின்றன? பிறகு எப்படி அழிந்து போகின்றன? ஒரே குழப்பமாக இருந்தது.

கப்பல் பயணம் முழுவதும் இதே கேள்விகள் அவனைக் குடைந்து கொண்டிருந்தன. எல்லோரும் உறங்கும் இரவு நேரங்களில் அவன் மட்டும் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தபடியே நட்சத்திரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

சூரியனும் ஒரு விண்மீன்தானே! சூரியனைவிட அடர்த்தி அதிகமாகவும், குறைவாகவும் உள்ள விண்மீன்கள் ஏராளமாக உள்ளன என்ற உண்மையை அவன் அன்று அறிந்துகொண்டான்.   நட்சத்திரங்கள் அதிக அளவில் வெப்ப ஆற்றலை உமிழும்போது, உள்ஈர்ப்பு விசையால் சுருங்கி குறுவெண்மை என்ற நிலையை நாளடைவில் அடையும் என்ற கருத்து அப்போது நிலவி வந்தது.

அவனது வானியல் ஆராய்ச்சிக்கு அந்தக் கப்பல் பயணம்தான் விதை போட்டது.

லண்டன் போய் இறங்கியதும் ஃபவுலரைப் போய்ப் பார்த்தார் அந்த இளைஞர். கப்பல் பயணத்தின்போது விண்மீன்களைப் பற்றி, தான் எண்ணிய கருத்துக்களை இரண்டு கட்டுரைகளாக எழுதி எடுத்துச் சென்றிருந்தார். அதைப் படித்துப் பார்த்த ஃபவுலர், அவரை அப்படியே கட்டிக் கொண்டார். முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார்.

ஃபவுலரின் தலைமையின்கீழ் ஆராய்ச்சிப் பணிகளை ஆரம்பித்தார்.  இடையில் அம்மா இறந்துவிட்ட தகவல் இந்தியாவிலிருந்து வந்தது. மனம் சோர்ந்து போனார். அவரைவிட அவர்மேல் அம்மாவுக்குத்தான் அதிக நம்பிக்கை என்ற எண்ணம் தோன்றியவுடன், சோகங்களையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு, தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றவுடன், டிரினிட்டி கல்லூரியில் ஆராய்ச்சிப் பேராசிரியராகச் சேர்ந்தார். அங்குதான் அவர் பேராசிரியர் ஆர்தர் எடிங்டனைச் சந்தித்தார். எடிங்டனைப் பற்றி இங்கு குறிப்பிட்டாகவேண்டும். அந்தக் காலத்தில் உலகப் புகழ்பெற்ற வானியல் வல்லுநராக விளங்கியவர் எடிங்டன். வானியல் சம்பந்தமாக எடிங்டன் எழுதிய கட்டுரைகளைப் படித்தபிறகுதான் அவருக்கு இந்தத் துறை மீதே ஆர்வம் வந்தது. அதனால் எடிங்டன் மீது அவருக்கு அளவுக்கதிகமான மரியாதை.

அப்படிப்பட்ட எடிங்டனுடன் கலந்து பழகும் வாய்ப்பு தானாகவே வாய்த்தபோது அவர் மிகுந்த உற்சாகமடைந்தார். இடையில் தன்னுடைய விண்மீன்கள் ஆராய்ச்சியைப் பற்றி ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் விஞ்ஞானிகள் முன்னிலையில் சொற்பொழிவாற்றினார். பிறகு மீண்டும் இங்கிலாந்து திரும்பி ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

ஒரு நாள் எடிங்டன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் நிறைந்திருந்த அவையில் தன் ஆராய்ச்சியை உற்சாகமாக எடுத்துரைத்தார் அந்த இளைஞர்.

‘சூரியனைவிட பல மடங்கு எடை அதிகம் உள்ள நட்சத்திரங்கள், ஈர்ப்பு விசை அதிகமாகிக் கடைசியாகச் சுருங்கும் நிலையை அடையும். இதற்கு கருங்குழி என்று பெயர். இந்த கருங்குழி நிலையில், வேறு எதுவும் அதன் அருகில் நெருங்க முடியாது. ஒரு சில விண்மீன்கள் சுருங்கிச் சுருங்கி, மேலும் சுருங்க முடியாத நிலையில் வெடித்து விடலாம். நட்சத்திரங்களின் அளவு சூரியனின் அளவைப்போல கால் பங்குக்கு மேல் இருந்தால், அவை அழியும்போது இந்த மாற்றங்கள் நிகழும்’ என்று கணித முறையில் தர்க்க வாதங்களுடன் எடுத்துக் கூறினார்.

சபையில், அவரது கோட்பாடுகளைக் கேட்ட எடிங்டன் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ‘உங்கள் கருத்துக்கள் தவறானவை’ என்று முகத்திற்கு நேராகவே கூறினார். அதைக் கேட்டு மற்ற விஞ்ஞானிகளும் அமைதியாக இருந்தனர்.

வானியல் துறையில் பழம் தின்று கொட்டைபோட்ட எடிங்டனின் பேச்சை மறுத்துப் பேசவோ, எதிர்க்கவோ முடியாதபடி மிகவும் இளையவராக இருந்தார் அவர். எனவே எதுவும் பேசாமல் அமைதி காத்தார்.

தொடர்ந்து தம் ஆராய்ச்சிகளைப் பற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றினார். வான்வெளி அமைப்புகளை, நட்சத்திர மண்டல இயக்கத்தை கணித ஆய்வின் மூலம் சமன்பாடுகளுக்கு உட்படுத்தி வானியல் பேருண்மைகளைக் கண்டறிந்தார்.

அப்போதுதான் அவரைத் தேடி வந்தது, அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் ஆய்வாளர் பணி.

மிகுந்த மகிழ்ச்சியுடன் அமெரிக்கா சென்றார். அங்கு மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதுடன், தமது ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தனது ஆராய்ச்சிகளைத் தொகுத்து ‘நட்சத்திரங்களின் அமைப்பு’ என்ற நூலை வெளியிட்டார்.

இடையில் இந்தியாவுக்கு வந்த அவர், தன்னுடன் சென்னை பிரசிடென்சி கல்லூரியில்  படித்த லலிதாவை திருமணம் செய்தார். லலிதா, அவரைவிட ஓராண்டு ஜூனியர். இருவருமே படிக்கும் காலத்திலேயே நன்கு அறிமுகமானவர்கள். அதனால் மண வாழ்விலும் அவருக்கு ஏற்ற துணையாய் இருந்து அவரது ஆராய்ச்சிகளுக்கு தூண்டுகோலாய் இருந்தார் லலிதா.

சிகாகோவில் பணியாற்றியபோது, மாணவர்கள் போற்றும் பேராசிரியராக விளங்கினார் அவர். மாணவர்களின் நலனுக்காகவும், ஆராய்ச்சிக்காகவும் அவர் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றினார். அவரது அளப்பறிய ஆர்ப்பணிப்பால், சிகாகோ பல்கலைக்கழகம் முழுவதும் அவர் புகழ் பரவியது.

அப்போதுதான் நியூஜெர்சியிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணிபுரிய அழைப்பு வந்தது. வாழ்க்கையில் உயர் பதவிகள் தேடி வரும்போது, அதை ஏற்றுக் கொள்வதுதானே சிறப்பு! அவருக்கும் அந்தப் பணியில் சேர ஆர்வம் ஏற்பட்டது.

ஆனால் சிகாகோ பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவரைத் தேடி நேரடியாக அவரது இருப்பிடத்துக்கே வந்தார்.

“நீங்கள் பிரின்ஸ்டனுக்குச் செல்வது எனக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் நீங்கள் அங்கு சென்றுவிட்டால், உங்கள் அறிவுரைப்படி இங்கு நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள் அனைத்தும் நிலைகுலைந்துவிடும். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தினர் உங்களுக்குச் செய்து தருவதாகக் கூறிய எல்லா வசதிகளையும், இங்கேயே நான் உங்களுக்குச் செய்து தருகிறேன். இப்போது வாங்கும் சம்பளத்தைவிட கூடுதல் சம்பளம் தரத் தயாராக இருக்கிறேன். பதவி உயர்வும் அளிக்க விரும்புகிறேன். நீங்கள் எங்களைவிட்டுப் போகவேண்டாம். நீங்கள் மனது வைத்தால், நீங்கள் பெருமை கொள்ளும் வகையில் ஒரு சிறப்பான பதவியை இங்கு உருவாக்க முடியும் அல்லவா?” என்று துணைவேந்தர் நெஞ்சம் உருகிக் கூறவும், அவரால் மறுக்க முடியவில்லை.

எந்த ஒரு  சிறந்த பொருளையும் எல்லோரும் தமக்கே உரிமையாக்கிக் கொள்ளத்தானே விரும்புவார்கள்!

அந்த சம்பவத்திற்குப் பிறகு அவர், சிகாகோ பல்கலைக்கழகத்தைவிட்டு வேறு எங்கும் பணியாற்றச் செல்லவில்லை. தன் முழு உழைப்பையும், அறிவையும் அந்தப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காகவே  செலவிட்டார். வானியல் ஆராய்ச்சிக்காக அவர் உபயோகித்தது பேனாவையும், காகிதத்தையும் மட்டுமே. தொலைநோக்கியை அவர் தொட்டதே இல்லை.

வானியல் துறையில் அவரது அளப்பறிய பங்களிப்பிற்காக பல்வேறு நாடுகளின் விருதுகளும், பதக்கங்களும் அவரைத் தேடி  அணிவகுத்து வந்தன.

எல்லாம் கிடைத்தும், அவர் மனதில் நிரந்தர சோகம் குடியிருந்தது. அவரது ஆராய்ச்சியை எடிங்டன், எள்ளி நகையாடிய அந்தத் தருணத்தை அவரால்  மறக்கவே முடியவில்லை. வானில் நட்சத்திரங்களைப் பார்க்கும்போதெல்லாம், தன் ஆராய்ச்சிக்குக் கிடைக்காத அங்கீகாரமே அவரை வாட்டியது.

காலம் மாறியது. வானில் ஒரு விடிவெள்ளி தோன்றியதைப் போல், அந்த நாளும் வந்தது. 1983-ஆம் ஆண்டு. அவரது கருந்துளைகள் கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்க நோபல் பரிசுக் குழுவினர் ஒருமனதாக முடிவு செய்தனர். சர்வதேச வானொலி நிலையங்கள், தொலைக்காட்சி நிலையங்களெல்லாம் ஒரே செய்தியை திரும்பத் திரும்ப ஒலி, ஒளிபரப்புச் செய்தன.

‘இந்தியாவைச் சேர்ந்தவரும், அமெரிக்காவில் வசிப்பவருமான பிரபல வானியல் நிபுணர் டாக்டர் சுப்பிரமணியன் சந்திரசேகருக்கும், பேராசிரியர் வில்லியம் ஃபவுலருக்கும் சேர்த்து பெருமை மிகு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது’ என்ற அறிவிப்பு உலகம் முழுவதும் ஒலித்தது.

எத்தனை நாள் கனவு இது! 50 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கனிந்திருக்கிறது! காத்திருப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் இது! பொறுமைக்குக் கிடைத்த பரிசு இது! இதற்காகத்தானே, இந்தியாவைவிட்டு, பெற்ற தாயைப் பிரிந்து அவர் வெளிநாட்டுக்கு வந்தார்.

1930-ல் இளைஞனாக, மனம் நிறைந்த கனவுகளுடன், கப்பல் பயணத்தில் உறக்கமின்றி வானத்து நட்சத்திரங்களை ஆராய்ச்சி செய்தது அவரது நினைவில் எட்டிப் பார்த்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரசேகர் அன்று நிம்மதியாக உறங்கினார்.


வாழ்க்கைக் குறிப்பு
பெயர்  : சுப்பிரமணியன் சந்திரசேகர்

பிறப்பு : 19.10.1910

படிப்பு  : திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி, சென்னை மாநிலக் கல்லூரி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், லண்டன் டிரினிட்டி கல்லூரி.

பணிகள்: சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர்.

ஆராய்ச்சி : நட்சத்திரங்களின் தோற்றம், வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி. வானியல் ஆராய்ச்சி

அறியப்படுவது : இவரது வானியல் கண்டுபிடிப்பு ‘சந்திரசேகர் லிமிட்’ என்ற பெயரில் மாணவர்களுக்குப் பாடமாக உள்ளது.

விருதுகள் :புரூஸ் பதக்கம், அமெரிக்க அறிவியல் கழகத்தின் ஃபோர்டு பதக்கம், ராயல் வானியல் கழகத்தின் தங்கப் பதக்கம், ரம்போர்டு பரிசு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆதம் பரிசு, இங்கிலாந்து நாட்டின் ராயல் கழகம் வழங்கிய ராயல் பதக்கம், காப்ளே பதக்கம், ஹென்றி ட்ரேபர் பதக்கம், இந்திய அரசு வழங்கிய பத்ம விபூஷண். வானியல் ஆராய்ச்சிக்காக 1983-ல் நோபல் பரிசு.

இறப்பு :   21.08.1995

பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி!




நீங்கள் பிளஸ் ஒன் மாணவரா? 10-ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு கோடை விடுமுறையை எப்படி உபயோகமாகக் கழிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பவரா?  உங்களுக்காக ஓர் அருமையான பல்லுயிர்ப் பெருக்கத் திட்டப்  (பயோ டைவர்சிட்டி) பயிற்சியை அறிவித்திருக்கிறது சென்னை லயோலா  கல்லூரியில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃப்ரண்டியர் எனர்ஜி (LIFE) அமைப்பு.

பல்லுயிர்ப் பெருக்கம், பல்லுயிர் வளங்கள் (பயோ ரிசோர்சஸ்), உயிரித்தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி) போன்றவை குறித்து மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும் நோக்கில் வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் மே 26-ஆம் தேதி வரை இந்தப் பயிற்சிகள் நடைபெறும்.

மத்திய அரசின் பல்லுயிர்ப்பெருக்கத் துறையின், தேசியப் பல்லூரியிர் வளங்கள் மேம்பாட்டு அமைப்பு இந்தப் பயிற்சிக்கு ஸ்பான்சர் செய்திருக்கிறது. பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள்,  லயோலா கல்லூரியில் தங்கியிருக்கவேண்டும். அவர்களுக்கு உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும்.

பயிற்சியின் நோக்கம்:
 நம் நாட்டிலுள்ள பல்லுயிர்ப் பெருக்கத்தின் மதிப்பை மாணவர்களிடம் விளக்குதல், உள்நாட்டில் கிடைக்கும் பல்வேறு பல்லுயிர் வளங்கள், அவற்றை உபயோகிக்கும் முறை, பாதுகாக்கும் விதம், பல்லுயிர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் போன்றவற்றை எடுத்துக்கூறுதல், பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல், பல்லுயிர்ப் பெருக்க ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளை மாணவர்களிடம் ஏற்படுத்துதல், உயிரித்தொழில்நுட்பம் தொடர்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  பிரச்சினைகளை மாணவர்கள் அறியச் செய்தல், பல்லுயிர்ப் பெருக்கம் தொடர்பாக நிபுணர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருதல் போன்றவற்றுடன், பல்வேறு களப் பணிகளிலும் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். பயிற்சியின் முடிவில் ஒவ்வொரு மாணவரும் ஒரு திட்ட ஆய்வை மேற்கொள்ள வழிகாட்டப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?:
 மாணவர்களைப் பற்றிய விவரங்களுடன், மாணவர்கள் படிக்கும் பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியரிடமிருந்து சான்றிதழ் கடிதம் பெற்று அனுப்பவேண்டும். அத்துடன் மாணவர்களின் பெற்றோரது இசைவுக் கடிதத்தையும் இணைத்து அனுப்பவேண்டும்.  ஒரு பள்ளியிலிருந்து ஒரு மாணவன் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்துடன், தங்களுக்கு இந்தப் பயிற்சி எந்த  விதத்தில் உபயோகமாக இருக்கும் என்பது பற்றி ஒரு பக்கத்துக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும்.

முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
M.Selvanayagam,
Director, LIFE,
Loyola College, Chennai - 600 034.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2012
விவரங்களுக்கு: 9043793818

இனி என்ன நடக்கும்?



அச்சிடுகமின்னஞ்சல்



ஜெனீவா வாக்கெடுப்பில் இலங்கை அரசுக்கு ஏற்பட்ட தோல்வி, வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பாக இந்தியா எடுத்த நிலைப்பாட்டை இலங்கை ஏற்றுக்கொள்கிறதா, இல்லையா என்பது வேறு விஷயம். சில நாடுகள் உள்நாட்டு நிர்பந்தங்கள் காரணமாக நிலைப்பாடு எடுப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ் கூறியிருந்தாலும்கூட, இந்தியாவின் முடிவை எதிர்ப்புடன் அல்லது காழ்ப்புணர்ச்சியுடன் இலங்கை பார்க்கவில்லை என்று தெரிகிறது.

கடைசி வரையில் ஒரேயொரு விஷயத்தில் இலங்கை உறுதியாக இருந்தது. அதாவது, வெளிநாட்டு தலையீடு இருக்கக்கூடாது என்கிற நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருந்தனர். பொறுப்புடைமை (accountability), போர்க்குற்றங்கள் என்றெல்லாம் வருகிறபோது, அரசின் தலைமையையும் ராணுவ வீரர்களையும் அது பாதிக்கும். எந்தவொரு அரசாங்கமும் போர் முடிந்தவுடன் தன்னுடைய ராணுவ வீரர்களை தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்ட வேண்டிய நிலை ஏற்பட்டால், அது அந்த அரசுக்கும் அந்த நாட்டிற்கும் ஆபத்தாக முடியும். வெளிநாடுகளில் இருந்து குறுக்கீடுகள் வரக்கூடாது என்று அவர்கள் சொல்வதற்கு முக்கியக் காரணம், குறிப்பிட்ட ஊரில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட பிரிவில் எந்தெந்த ராணுவ வீரர்கள் இருந்தனர் என்று ஒவ்வொரு நபராகக் குறிவைக்கப்படும்போது அங்கு ராணுவப் புரட்சி கூட வரும் வாய்ப்புள்ளது. எனவே, அவர்கள் தங்கள் முடிவில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளனர்.

தமிழினப் பிரச்சினை குறித்து இலங்கை அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்தப் பேச்சுவார்த்தையை இலங்கை அரசு இந்த டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்கு தள்ளிவைத்தது. அதற்கு பல காரணங்கள் உண்டு. தற்போதைய சூழலில் அந்தப் பேச்சுவார்த்தை தொடருமா என்பது சந்தேகமாக உள்ளது. குறிப்பாக, ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன்அமைத்த குழுவின் அறிக்கை வந்ததற்கு மறுநாளே அதற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால், இலங்கை அரசோ அதை ஆதரித்து அறிக்கை வெளியிட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு இருவரும் சந்தித்துப் பேசினர். இரு தரப்பினருக்கும் இடையே இடைவெளி வந்துவிடக்கூடாது என்பதில் இருவரும் கவனமாக இருந்தனர். அதன் பிறகும் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அந்தப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடருமா என்பது சந்தேகமாக உள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் ஆதரவோடுதான் முடிவு எடுப்போம் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக உள்ளது. அதை அரசிடமும் தெரிவித்துள்ளது. தற்போது, ஜெனீவா வாக்களிப்புக்குப் பிறகு இரு தரப்புப் பேச்சுவார்த்தை தொடருமானால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சொல்வதை புலம்பெயர்ந்த தமிழர்கள் கேட்பார்களா அல்லது புலம்பெயர்ந்த தமிழர்கள் கூறுவதைக் கேட்க வேண்டிய கட்டாயம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்படுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் ஜெனீவா வெற்றியானது தமிழினம் என்பதைப் பொருத்தவரையில், அது புலம் பெயர்ந்த தமிழர்களையே சாரும். எனவே அவர்கள் இன்னும் வலுப்படுவார்கள். அதுபோன்ற சூழல் வருமானால் அவர்கள் எடுக்கும் எந்தவொரு முடிவும் தனி நாடு என்ற இலக்கை நோக்கியதாகத்தான் இருக்கும். இந்த விஷயத்தில் இலங்கை அரசுக்கு சந்தேகம் எழுமானால் பேச்சுவார்த்தையை அது முன்னெடுக்காது.

கடந்த முறை பேச்சுவார்த்தை நடக்கும்போதெல்லாம் அரசு சார்பில் கலந்து கொண்டவர்கள், எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் ஜனாதிபதியிடம் பேசிவிட்டு வருகிறோம் என்றும் சொல்லிவிட்டுச் செல்வார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ எதுவாக இருந்தாலும் இப்பொழுதே பேசத்தயார் என்று சொல்வார்கள். ஆனாலும் அவர்கள் ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை முடித்துச் சென்றுவிட்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்போது அவர்களின் யுக்திகளிலும் கோரிக்கைகளிலும் சில பல மாறுதல்கள் இருந்தன. அதை அவர்கள் தாங்களாகவே முடிவு செய்தனரா, இல்லை வெளியிலிருந்து யாருடைய நிர்பந்தம் காரணமாக முடிவு எடுத்தனரா என்கிற சந்தேகம் அரசுக்கு இருக்கவே செய்கிறது.

தற்போதைய சூழலில் ஜெனீவா வாக்கெடுப்பில் இலங்கை அரசுக்கு ஏற்பட்ட தோல்வியானது, வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்கா கடைசி நேரத்தில் தீர்மானத்தை வாபஸ் செய்திருந்தாலோ, நீர்த்துப்போன தீர்மானம் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் நினைத்தாலோ, நம்மை இந்தியா ஏமாற்றிவிட்டது, அமெரிக்கா ஏமாற்றிவிட்டது, தன் கையே தனக்கு உதவி என்று அவர்கள் மீண்டும் போராட்ட குணத்திற்கு திரும்பி இருப்பார்கள்.

ஜெனீவா வெற்றி காரணமாக, கடுமையான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய மனநிலை புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சூழலில், கடந்த காலங்களில் எல்டிடிஇ அமைப்புக்கு அவர்கள் செய்து வந்த உதவிகள், பணப் பரிமாற்றங்கள், தனி அரசாங்கம் நடத்தியது போன்ற விஷயங்களை எல்லாம் வைத்து தற்போதும் கூட இலங்கை அரசு அவர்களை சந்தேகக்கண் கொண்டுதான் பார்த்து வருகிறது. இலங்கைத் தமிழர்களை குறிப்பாக இளைஞர்களை இவர்கள் மீண்டும் போராளிகளாக வந்து விடுவார்களோ என்று அங்குள்ள பாதுகாப்புப் படைகள் சந்தேகத்துடன்தான் பார்க்கின்றன. இத்தகைய சூழலில், புலம் பெயர்ந்த தமிழர்களின் போக்கு கடுமையாகிறது என்று தெரிந்தால், அங்குள்ள தமிழர்களுக்கு இடர்பாடுகள் அதிகமாகும்.

ஜெனீவா வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியடைந்த பிறகு அங்குள்ள சிங்களப் பேரினவாதிகள் தங்கள் மீது மீண்டும் காழ்ப்புணர்ச்சி கொள்வார்களோ என்ற பயம் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு வரும் வாய்ப்புள்ளது. முப்பது ஆண்டுகளாக அமைதியை இழந்து, இருக்கிற கொஞ்ச நஞ்ச அமைதியும் தொலைந்து விடுமோ என்று பயந்து வாழும் சூழலுக்கு இலங்கையில் வாழும் தமிழர்களை ஜெனீவா வாக்களிப்பு தள்ளியுள்ளது. இது ஒரு பெரிய இடர்பாடு. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகி விடக்கூடாது.

இப்படிப்பட்ட சூழல் வருமானால், இலங்கையில் தமிழினப் போர் இயக்கங்கள் மீண்டும் உயிர்ப்பித்து வருமானால், அதன் தாக்கமும் துவக்கமும் தமிழ்நாட்டில் இருந்துதான் வரும் என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. அதனால் தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் ஏற்படும். மிதவாத அரசியல் போக்கு என்று எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் ஜெனீவா வாக்கெடுப்பிற்கு உரத்த குரல் கொடுத்து மத்திய அரசைப் பணிய வைத்தன. அதற்கு ஒரு காரணம், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி செயல்படும் சில குறிப்பிட்ட சிறிய கட்சிகளும் சிறிய தமிழினக் குழுக்களும்தான். இப்போது அவர்கள் தங்களது யுக்தி வெற்றிபெற்றுவிட்டது என்று கருதுவார்களேயானால், மேலும் மேலும் இந்திய அரசைக் கட்டாயப்படுத்தி இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அவ்வாறாக, அவர்களோ அல்லது அவர்களுக்குப் பின்னிருந்து செயல்படும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களோ விரும்பினால், தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை சார்ந்த மிதவாத அரசியலில் ஏட்டிக்குப் போட்டி என்ற நிலைமை மீண்டும் உருவாகும்.

கூடங்குளம் பிரச்சினை ஓர் உதாரணம். கூடங்குளம் பிரச்சினைக்கும் தமிழினப் பிரச்சினைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒருவேளை கூடங்குளத்தில் பேரழிவு ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனால் தமிழக மக்கள் மட்டுமல்லாமல், பக்கத்து கேரளாவில் உள்ள மலையாள மக்களும் பாதிக்கப்படுவார்கள். ஆனால், ‘தமிழினத்தைக் காவு கொடுக்கப்போகிறோம்’ என்று சிலர் பேசத் தொடங்கினர். தமிழ்நாடு அரசு ஒரு முடிவு எடுத்தவுடன், ‘தமிழினம்’, ‘முள்ளிவாய்க்கால்’ என்றெல்லாம் பேசி இந்த அரசியலையே மாற்றப் பார்க்கின்றனர். தமிழ்நாட்டில் இனப்பிரச்சினை அல்லாத மக்கள் பிரச்சினையிலும் கூட இனப்பிரச்சினையைப் புகுத்தும் நிலை உள்ளது. இது கவனமாக கையாளப்பட வேண்டும்.

ஜெனீவா தீர்மானம் வெற்றி பெற்றதுடன் இப்பிரச்சினையை ஒரு ‘லைவ் இஷ்யூ’ ஆக வைத்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. காரணம், இந்த ஆண்டு கடைசியில் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகிறது. ஒபாமா தலைமையில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் உள்ளன என்பதை அமெரிக்க வாக்காளர்களுக்கு சொல்ல நினைக்கின்றனர். எனவே, தீர்மானம் கொண்டு வந்ததன் பின்னணியில் அரசியல் காரணம் இருக்கிறது. நல்லெண்ணத்தின் அடிப்படையில் அதைச் செய்யவில்லை.

இலங்கைக்கு ஆதரவாக சீனா செயல்படுகிறது என்று சொல்வதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. இலங்கைக்கு சீனா நிறைய கடன் கொடுத்துள்ளது. ஹம்பந்தோட்டா துறைமுகம், மாத்தளை விமான நிலையம், நிலக்கரி அனல்மின் நிலையம் உட்பட பல திட்டங்களுக்கு ஏராளமாக நிதி கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த கடனை இலங்கையிடம் சீனா எப்பொழுது கேட்கிறதோ அப்பொழுது இலங்கை அரசால் அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விட்டால் அதற்குப் பிணையாக அல்லது மாற்றாக இலங்கையிடம் இருந்து சீனா எதை எதிர்பார்க்கும் என்றெல்லாம் பேசுகிறார்கள். இதெல்லாம் வெறும் ஹேஷ்யங்களே. ஆனால், இலங்கைக்கு சீனா ஆதரவு கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டை சீன அரசியல் மற்றும் இலங்கை அரசியலை நன்கு அறிந்த எவரும் எளிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தெற்காசியாவில் இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடு. இந்திய எல்லையை ஒட்டிய சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு ஆகிய நான்கு நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. எதிர்காலத்தில், இலங்கையைப்போல நமக்கும் ஒரு பிரச்சினை ஏற்படுமானால் இந்தியா நம்மை ஆதரிக்காது என்ற எண்ணம் அண்டை நாடுகளுக்கு வரலாம். அண்டை நாடுகளை அரவணைத்துச் செல்வதில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. ஆனால், இன்றைக்கு அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தியா மாதிரியான ஒரு பெரிய நாடு அண்டை நாட்டைக் கைவிட்டுவிட்டதே என்ற எண்ணமும் இந்தியாவை நம்பி நாம் எதுவும் செய்ய முடியாது என்கிற எண்ணமும் மற்ற அண்டை நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசு இந்தியா மீது சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் துவங்கினால் இலங்கையில் உள்ள சிங்களப் பேரினவாதிகள் அங்குள்ள தமிழனத்தைப் பயமுறுத்தும் அளவுக்கு நடக்குமானால், அப்பொழுது இந்தியா வேறு விதமாக தலையிட வேண்டிய சூழல் உருவாகலாம். அந்தச் சூழலை தமிழகத்தில் உள்ள தமிழினப் போராளிகளோ, தமிழன ஆதரவுக் குழுக்களோ பெரிதுபடுத்துவார்கள். பிரச்சினை மேலும் மேலும் பெரிதாகிவிட்டால் இந்தியாவுக்கும் அண்டை நாடுகளுக்குமான உறவு வேறுவிதமாகப் போய்விடும்.

இந்தத் தீர்மானத்தால் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தூக்கம் கெடும். வடக்கில் உள்ள தமிழர்களுக்கு பிரச்சினைகள் இருக்காது. வடக்கு கிழக்கு மாகாணத்தில் பிப்ரவரி 27, 28ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பலரும் வெளிநாடுகளுக்குப் போய்விட்டனர். பலர் போரில் இறந்துவிட்டனர். பலர் அங்கிருந்து வெளியேறி கொழும்பில் குடியேறிவிட்டனர். இப்போது கொழும்பில் இருக்கும் தமிழர்கள் எப்படா வெளிநாட்டிற்குப் போவோம் என்றுதான் இருக்கிறார்களே ஒழிய அங்கு தங்கள் நாட்டில் இருக்க விரும்பவில்லை. இன்றைய சூழலில் அரசின் கணக்குப்படி அங்குள்ள விதவைகள் 90 ஆயிரம் பேர் உள்ளனர். அடுத்தடுத்த தலைமுறையில் தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். அப்படியென்றால் நாம் எதற்காகப் போராடுகிறோம், யாருக்காகப் போராடுகிறோம் என்ற கேள்வி அங்குள்ள தமிழர்களுக்கு எழும்.

நான்கைந்து அரசியல் கட்சிகளும் தனிப்பட்ட ஐந்தாறு எம்பிக்களும் சேர்ந்ததுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியும் அல்ல. அதைப் பதிவு செய்யப்பட்ட கட்சியாக மாற்ற வேண்டும் என்பதில் அவர்களுக்குள்ளே கருத்து வேறுபாடு இருக்கிறது. இன்றைக்கு 80 வயதான சம்பந்தம் தலைவராக உள்ளார். அவருடைய இடத்தில் இன்னொரு ஆளை வைத்துப்பார்க்க அவர்கள் தயாராக இல்லை. இளைஞர்களை எல்டிடிஇ போராளிகளாக மாற்றியதே தவிர, அதில் சில பேரையாவது அடுத்த தலைமுறையினருக்கான அரசியல்வாதிகளாக மாற்றவில்லை. போர் முடிந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பல இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் யாரையாவது வளர்த்துக் கொண்டுவர வேண்டும் என்கிற முயற்சி இல்லை. அதற்கான மனப்பான்மையும் இல்லை. இதன் விளைவால் நாளைக்கு இலங்கை அரசுடன் சரிசமமாக நின்று பேசக்கூடிய தமிழினத் தலைமை அங்கு உருவாகாமலே போய்விடும்.