Saturday 15 December 2012

அண்டப் புளுகு ஐயா...

அண்டப் புளுகு ஐயா...
ஆகாச புளுகு அம்மா!

எம்.ஜி.ஆர். சமாதி முன்பாக, கோடிகளைக் கொட்டி இரட்டை இலை சின்னத்தை வடிவமைத்து, அரக்கப் பறக்க திறந்தும் வைத்துவிட்டார் ஜெயலலிதா. 'அரசுப் பணத்தில் ஒரு கட்சியின் சின்னத்தை அமைக்கக் கூடாது' எனறு தி.மு.க. போட்டிருக்கும் வழக்கு, உயர் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. 'அது இரட்டை இலை அல்ல... கிரேக்க குதிரையின் இறகு' என்று கொஞ்சம்கூட நாகூசாமல் நீதிமன்றத்தில் பொய் பேசியிருக்கிறார் தமிழக அரசின் வழக்கறிஞர்.

'கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை' என்பது போல... ஊருக்கே தெரியும் அது இரட்டை இலைதான் என்று. அப்படியிருந்தும் தமிழக அரசின் பிரதிநிதியாக நீதிமன்றத்தில் இப்படி அநியாயத்துக்கும் பொய்யுரைத்திருப்பது... எந்த அளவுக்கு சரி!

ஆட்சியாளர்களுக்கு பொய் பேசுவதற்கு எப்போதுமே வாய் கூசுவதில்லை என்பது வேறு விஷயம். ஆனால், நீதிமன்றத்தில்... அதுவும் ஊருக்கே தெரிந்த ஒரு விஷயத்தில் நாகூசாமல் பொய் கூறுகிறார்கள்.

இப்படித்தான், தி.மு.க. ஆட்சியில் அண்ணா சமாதியில் உதய சூரியன் சின்னத்தைப் பதித்துள்ளனர். இதைப் பற்றி கேட்டதற்கு, 'அது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் செய்தது. எனக்குத் தெரியாது' என்பது போல பதில் தந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

நாட்டில் மக்களுக்கு தேவையான அதி அத்தியாவசியமான விஷயங்களுக்கு செலவிட பணம் இல்லை. ஆனால், இப்படி சமாதிகளுக்கு அள்ளிக் கொட்டுகிறார்கள். அதைப் பற்றி கேட்டால்... மாற்றி மாற்றி புளுகுகிறார்கள்.
ம்... ஐயா, அண்டப் புளுகு என்றால்... அம்மாவோ ஆகாச புளுகு என்பதாக இருக்கிறார்.

ம்... இப்படிப்பட்டவர்கள்தான் மாற்றி மாற்றி நம்மை ஆள்கிறார்கள் என்று நினைக்கும்போது... 'நாண்டுகிட்டு செத்துடலாம்னுதான் தோணுது' ஆனா, இதைப் பத்தி எழுதுறதுக்காவது... கொஞ்சம் உசுரோட இருக்கலாம்னு உள் மனசு சொல்லுது.
சத்தியமா நான் பொய் சொல்லலீங்கோ!

-ஜூனியர் கோவணாண்டி

No comments:

Post a Comment

Thank You...