Friday 14 September 2012

நவகண்டப்பலி


----------------------
போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு "நடுகல்" எடுத்து அந்நாளில் வழிபட்டார்கள். வீரனுடைய திருவுருவம் அந்த நடுகல்லில் பொறிக்கப்பட்டிருக்கும். வீரர்களை போற்றி வழிபட்டதைப் போலவே,கொற்றவைக்காகவோ அல்லது பொது மக்க
ளின் நன்மைகளுக்காகவோ உயிர் தியாகம் செய்த தியாகிகளையும் ,தமிழர்கள் சிலையில் வடித்துப் போற்றி வழிபட்டு வந்தார்கள்.அச்சிலைகள் சாவான் சிலைகள் என்றும் நவகண்டம் என்றும் பொதுவில் வழங்கப்படுகின்றன.தங்கள் உடம்பில் உள்ள ஒன்பது உறுப்புகளையும் தாங்களாகவே அறுத்துக் கொடுத்துக் கொற்றவையை வழிபட்டதால் "நவகண்டப்பலி" என்று அது கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் பல இடங்களில் சாவான் சிலைகளைக் காணலாம்.ஆனால் அச்சிலைகளில் எதன் பொருட்டு ,யார் அந்த பலியைக் கொடுத்தார் என்ற விவரம் பொறிக்கப்பட்டிருப்பது அபூர்வம். அருகே காணப்படும் நவகண்டப்பலி வீரனின் சிற்பத்தில் அவன் பெயரும் செய்தியும் பொறிக்கப்பட்டிருப்பதால், இது முக்கியமான சிலையாகக் கருதப்படுகிறது.இதில் உள்ள வீரன்,தன் இடக்கையில் தன் தலை மயிரைக் கற்றையாக இழுத்துப் பிடித்துக் கொண்டு வலக்கையில் வாள் பிடித்துக் கழுத்தின் பின் பக்கமாகத் தன் தலையை அறுத்துக் கொள்கிறான். அவன் முகத்தில் துன்பத்தின் சாயலே இல்லை.புன்சிரிப்புடன் உயிர்த் தியாகம் புரியும் அவன் முகத்தில் பூரிப்பும் பெருமிதமும் காணப்படுகின்றன.இச்சிலையில் பதினோராம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன. "தைஞ்சு செய்யன் கொழகனுக்கு இராவிலே...கங்க...நம்பி செ குடுத்தார் ராஜேந்திர நாந சோழ தந்ம செட்டியார்கு எழுத்து" என்ற தொடர் காணப்படுகிறது.செய்யன் கொழகன் என்பவனுக்கு இரவிலே என்ன நடந்தது... ராஜேந்திரனான சோழ தன்ம செட்டியார் யார் என்று தெரியவில்லை. புதுவை வரலாற்றுச் சங்கத் தலைவரும் புதுவை மாவட்ட ஆட்சித் தலைவருமாகிய பி.எல்.சாமி தலைமையில் தாதாபுரம் வட்டாரத்தில் கள ஆய்வுப்பணி நடை பெற்ற போது,இந்தச் சிலை கல்லேரியம்மன் கோயில் அருகே கண்டறியப்பட்டது. அச்சிறுபாக்கம் தாமரைக்கண்ணனும் பாகூர் குப்புசாமியும் இச்சிலை பற்றிய கள ஆய்வுப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.


No comments:

Post a Comment

Thank You...