Thursday 24 May 2012

இரவின் மடியில் ... (கவிதை) !





இரவின் மடியில் ... (கவிதை) !

பகலிரவு இரண்டில் இரவையே
நேசிக்கின்றேன் நான் !

இருள் பற்றிய பயம் எனக்கில்லை,
முதன் முதலில் நான் பயந்தது அழுதது
இருட்டைப் பார்த்து அல்ல,
வெளிச்சத்தைப் பார்த்துதான் !

இருள் சூழ் கருவறையில் உறங்கிப்
பிறந்ததன் நினைவோ,
கார்முகிலின் இருளைப் பார்க்கும்
போது கருவறையில் குடியிருந்ததன்
குளுமையை உணர்கிறேன் !

கண்களைக் கவரும்
வெளிச்சத்தின் பகட்டை விட
கலப்பில்லா காரிருளின்
அமைதி மேன்மையானதென்பேன் !

என்னை மறந்து உறங்கும் நேரங்களையும்,
இன்பங்களையும்,
தருவதில் இரவுக்கு சமன் எது ?

எனக்கே எனக்காக பயன்படுத்திக் கொள்ளும்
நேரமென்றால் அது இனிய இரவுதான்.

நான் மட்டுமா ? உயிருள்ளவை
அனைத்தும் உறக்கமும், அமைதியும், ஓய்வும்
பெறுவது இரவின் மடியில் தானே ?

தாயின் மடிபோல் தான் இருளும், ஆடிய
ஆட்டத்தில் அலுப்புடன், உறங்கப் போகும்
என் விழிகள் என்றோ ஒரு நாள்,
இருள் சூழ்ந்து... கண்களை,
அப்படியே ஆசையாக தழுவி அணைத்து,
உறக்கத்தில் ஆழ்த்தி தன் மடியில் கிடத்த,
அமைதி கொள்ளவாய், என
நான் கரைந்து போவதும் அந்த இருளில் தான் !

No comments:

Post a Comment

Thank You...