Thursday 24 May 2012

குழந்தை

உறக்கம் வர
அம்மாவிடம் கதை
கூறச்சொல்லி
படுத்து கேட்டுக்கொண்டிருந்தாள்
பிஞ்சுக் குழந்தை...
மறுநாள் பொம்மையை
அணைத்தபடி தான் கேட்ட
கதையை கூறிக்கொண்டிருந்தாள்
அந்த பொம்மையை
உறங்கச்சொல்லி....

*********************************************

வெளியில் கிளம்பிய
என்னை பார்த்து அழுத
குழந்தையை
சமாதானப்படுத்த
வீடு திரும்பும்பொழுது
மிட்டாய் வாங்கி வருகிறேன்
என்றேன்...
திருமணநாள் அன்று
கோவிலுக்கு அழைத்து செல்லாமல்
வீட்டிற்கு நேரம் கழித்து
வந்த என்னை பார்த்து
சிணுங்கிய மனைவியிடம்
அப்பா மிட்டாய் வாங்கி
வந்திருப்பார்
அழுகாதே என்றது
குழந்தை....
***************************************************

அம்மாவை பிடிக்குமா
அப்பாவை பிடிக்குமா
என்று கேட்டேன்
குழந்தையிடம்...
தன்னோடு எப்பொழுதும்
இருக்கும் கரடி பொம்மையை
தான் பிடிக்கும் என்று
கட்டிக்கொண்டது குழந்தை...
அலுவலகத்திலிருந்து திரும்பிய
எங்கள் இருவருக்கும்
சுரீரென்றது....

No comments:

Post a Comment

Thank You...