Thursday 24 May 2012

என்னத்தச் சொல்ல.....



இந்த மின்னஞ்சல் அனுப்பறது ரொம்ப சௌகரியமா இருந்தாலும், சுகங்கள் என்றுமே ஆபத்தானவைதானே. எங்கள் நட்பு வட்டாரத்தில், மகாபாரதத்தைப் பற்றி சுற்றில் விடப்பட்ட ஒரு மின்னஞ்சலை எனக்கு ஒரு நண்பர் ஃபார்வேர்டு (இதற்கு யாராவது சரியான தமிழ் வார்த்தை சொல்லுங்களேன்) செய்ய, அதை நான் மற்றவர்களுக்கு அனுப்ப, மற்றவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்கள் என அனுப்ப, அந்த சங்கிலி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறதோ அல்லது முடிந்து விட்டதோ தெரியவில்லை. ஆனால், வில்லங்கமே இந்த மாதிரி தொடர் மின்னஞ்சல்களில்தான் ஆரம்பிக்கிறது. நமக்கு அனுப்பியவர்களின் முகவரியோடு கூட நாம் அதை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறோம். அது நமது நண்பர்கள் வட்டத்தை விட்டு, பல வட்டங்களில் போய், பல நாடுகளில் சுற்றும் பொழுது, எத்தனையோ முகவரிகள் இணைந்து விடுகிறது. இப்படி பல முகவரிகளை பார்த்த ஒரு வக்கிர மனிதன், அதிலிருக்கும் பெண்முகவரிகளை பொறுக்கிஎடுத்து, அவர்களுக்கு வக்கிர மெயில்களை அனுப்ப ஆரம்பித்தவுடன், அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. இந்த இம்சை தொடர்ந்து நடைபெறவே, ஒரு சில மென்பொருள் துறை பெண்கள், எங்கிருந்து இது ஆரம்பித்தது என துப்புத்துலக்கி அவனை பிடித்தும் விட்டார்கள். அதற்கு முன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும் அனைத்து ஆண்களையும் அவர்கள் சந்தேகப்பட்டது தான் மனதை நோகடித்து விட்டது. அவன் ஐரோப்பாவில் இருக்குமொரு தமிழன்.(வெட்கக் கேடு). பிறகு என்ன, பொது மன்னிப்பு, நான் இதை விளையாட்டுக்குத்தான் செய்தேன். இதை பெருந்தன்மையுடன் எடுத்துக் கொள்வார்கள் என நினைத்தேன்.(ங்கொய்யால கையில கிடைச்சா உனக்கு இருக்குடி) இவ்வளவு வீரியமடையும் என நான் நினைக்கவில்லை என்பது போன்ற வழக்கமான வழிதல்களுடன் அவன் நண்பர்கள் வட்டத்திற்கு வெளியே தூக்கி எறியப் பட்டிருக்கிறான். இப்பொழுதெல்லாம் பொது மின்னஞ்சல்களை முகவரிகளையெல்லாம் அழித்து விட்டு, BCC ல் முகவரி இட்டு அனுப்புகிறேன். ஆனால் இதையும் கண்டு பிடிக்க உத்திகள் இருக்கிறதோ என்னவோ, என்னைப் போன்ற ஞான சூன்யங்களுக்கு தெரியவில்லை. அவன் எங்கள் நட்பு வட்டத்தில் இல்லவே இல்லை. ஆனால் இந்த மின்னஞ்சல் என்பது எவ்வளவு ஒரு சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனமாயிருக்கிறதோ, அதிலும் நம்மை அறியாமலே நாம் ஒரு சில வக்கிர ஆசாமிகளின் வலைக்குள் இழுக்கப்படுகிறோம் என்பதை அறியும் போது என்னத்தைச் சொல்ல.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஒரு வழியாக நித்தியானந்தாக்கள் சகாப்தம் அமைதியாகி, மக்கள் வேறு பிரச்சனைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். இனி அடுத்த சாமியாரோ, பாஸ்டரோ அல்லது மௌலாவோ கிடைக்கும் வரை அமைதி காக்க வேண்டியதுதான். ஊடகங்களும் அலைந்து திரிந்து, எப்படியாவது அடுத்தவரை வெகு சீக்கிரத்தில் நம்முன் கொண்டு வந்து நிறுத்தி விடும். அப்புறமென்ன கொஞ்சம் அடித்துக்கொள்ளுவோம், அடுத்தவன் சுதந்திரம், அப்பள மந்திரம், ஊடக தந்திரம் என்று பலரும் குமுறுவோம். அமைதியாகிவிடுவோம். இந்த சாமியார்களுடன் தொடர்புகொண்ட நமக்குத்தெரிந்த நபர் இருப்பின் அவரை பார்த்து கொஞ்சமும் கூசாமல் விரல்களை நீட்டி, “சே, இவுரு ரொம்ப நல்லவர்னு நினைச்சேன். இவுருமா அப்படி, என்னால நம்பவே முடியல” ன்னு சொல்லி நமது நடுநிலைமையை நிலை நாட்டிக் கொள்வோம். என்னத்தச் சொல்ல…..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பகுஜன் சமாஜ் கட்சி என்ற ஒரு அரசியல் கட்சி, தனதி 25வது பிறந்த நாளை கொண்டாடியது. அதற்காக லக்னௌ நகரமே நீல வர்ணம் பூசிக் கொண்டு விழாக் கோலம் பூண்டது. தனது ஆடம்பரங்களுக்கு பெயர் போன இன்றைய உத்தர பிரதேச முதலமைச்சரான மாண்புமிகு (ஹூக்கும்), மாயாவதி அவர்களுக்கு, அவரது கட்சியின் ஏழைத் தொண்டர்கள் எல்லாம் தங்களது எளிய வருமானத்திலிருந்து ஒரு மாலையை உருவாக்கி பரிசளித்தார்கள். கர்நாடகாவிலிருந்து இதற்கெனவே சிறப்பாக அழைத்துச் செல்லப்பட்ட மாலை தயாரிப்பாளர்களின் மூன்று மாத கடின உழைப்பில் உருவானதுதான் இந்த சர்ச்சைக்குரிய மாலை. என்னன்னு கேக்கறீங்களா, பூவைக் கோத்து மாலை போட்ட எவன்யா கேக்கப்போறான், இவுங்க கோத்ததெல்லாம் 1000 ரூவா நோட்டு, மொத்தம் எத்தனை நோட்டு தெரியுமா, இருவத்தி ரெண்டரை கோடி ரூபாயாம். இந்த கட்சியின் ஏழைத்தொண்டர்கள் கொடுத்த பணத்திலிருந்து 200 கோடி ரூபாய் செலவு பண்ணி ஒரு விழா, அதுல கட்சியின் தலைவிக்கு இருவத்திரெண்டரை கோடியில ஒரு மாலை, யப்பா, தலைவருங்களா, எங்கியோ போயிட்டீங்க, என்னத்தச் சொல்ல….

No comments:

Post a Comment

Thank You...