Thursday 24 May 2012

நகரம் - ஹரித்துவார் - தெய்வத்தின் வாசல்.


தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்து வழித்தெடுத்த அமுதத்தின் ஒரு குடம் (கும்பம்) இங்கு வைக்கப்பட்டிருந்ததாகவும், அதிலிருந்து சில துளிகள் தரையில் சிந்தியதாகவும் சொல்லப்படும் ஒரு இடம் இது. அமுதத்தை வழித்தெடுத்த பின் வழக்கம் போல தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க வேண்டிய பங்கை கொடுக்காமல் அழுகுணி ஆட்டம் ஆட, அசுரர்கள் அதைப் பறிக்க முயல, அமுதத்தை நான்கு குடங்களில் ஊற்றி, அந்த வழியே வந்த கருட பகவானிடத்தில் கொடுத்து அனுப்புகிறார்கள். கருட பகவான் நான்கு குடங்களையும் நான்கு இடங்களில் மறைத்து வைக்கிறார். உஜ்ஜைன், நாசிக், அலகாபாத் மற்றும் ஹரித்துவார். இந்த நான்கு இடங்களிலும் கும்பங்களில் வைக்கப்பட்டிருந்த அமுதம் சில துளிகள் சிந்தி விட்டதால் தான் இங்கு “கும்பமேளா” க்கள் கொண்டாடப் படுகின்றன. மேலும் இந்த பாற்கடலை கடைந்து, அதற்கப்புறம் நடந்த களேபரங்களில் தெரிந்தோ, தெரியாமலோ பார்வதியுடன் ரொமான்ஸில் இருந்த சிவனும் பங்கெடுத்துக் கொண்டதாலும், அதே சமயத்தில் பாற்கடலை கடைய எடுத்து வந்த மந்தராச்சல மலை கடலில் மூழ்கும் பொழுது, அதை தாங்கிப் பிடிப்பதற்காக ஆமையாய் அவதாரமெடுத்து விஷ்ணுவும் ஆட்டத்தில் உள்ளதாலும், ஹரித்துவார் என்னும் இந்நகரம் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பெருமை சேர்க்கிறது.

நிதர்சனத்தில், எக்கச்சக்க பெயர்தெரியா மூலிகைகளுக்குள் புகுந்து, நறுமணமெடுத்து, அநேக வியாதிகளுக்கு ஒரே மருந்தாயிருந்து, பொங்கிப் பிரவாகமெடுக்கும் கங்கை நதி மலைகளிலிருந்தெல்லாம் கீழிறங்கி சமவெளியில் சாதுவாக நடைபயில ஆரம்பிப்பது இந்தப் புள்ளியில் தான். அதனால் இங்கு கங்கையில் குளிப்பவர்களுக்கு உடல் சுகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்ற ஒரே ஒரு காரணம் தான் இந்த இடம் செழித்து வளர்ந்து ஒரு புண்ணிய தலமானதற்கு மூல காரணமாயிருக்க வேண்டும். ஆனால் இதற்கு அடுத்த நகரங்களில் தெரியாமல் கூட கங்கையில் குளித்து விடாதீர்கள். உங்களுக்கு எதாவது வியாதிகள் தொற்றிக் கொண்டால் கம்பெனி பொறுப்பாகாது. இந்த ஒரே காரணத்துக்காக சிறப்புப் பெற ஆரம்பித்த இந்த கங்கையின் சமவெளிப் பகுதியில், மனிதன் காலடி எடுத்து வைத்து பல காலம் வரை சிவனும் விஷ்ணுவும் நுழையாமல் தான் இருந்திருக்கிறார்கள். இவர்கள் நுழைந்தவுடன் தான் மோட்சமும், புனித குளியலும், ஆலகால விஷமும், பாற்கடலும், வாசுகி என்னும் பாம்பு கடலைக் கடைய கயிறானதும், விஷ்ணு ஆமையானதும், அமுதமும், பிறகு கும்பமும், அதுவும், இதுவும் பின்ன அது இது, அப்புறம் இது அதுவென எல்லா கதைகளும் ஆரம்பித்தது.

இன்னொரு விஷயம். இந்தியாவிலுள்ள இந்துக் குடும்பங்களின் வம்சாவளி விவரங்கள் இங்குள்ள பிராமிண பண்டிட்களிடம் கிடைக்கிறது. பண்டைய காலங்களில் முன்னோர்களின் சாம்பலை கரைக்க எல்லா இந்துக்களும் ஹரித்துவார்க்குத்தான் வந்தார்களாம். வருபவர்களின் ஊர், விலாசம், வம்சம், இன்னும் என்னென்ன விவரங்களையெல்லாம் பதிவு செய்ய முடியுமோ அதையெல்லாம் அவர்கள் பதிவு செய்து விட்டு போய் விட்டார்கள். இன்று அதில் அநேகர் முகமதுகளாகவும், ராபர்ட்டாகவும், பீட்டராகவும் மாறிப் போயிருக்கலாம். இன்று இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரால் உடனடி சுகமளிக்கிற அற்புத ஊழியர்களும், பகுத்தறிவு பகலவன்களும் தங்கள் ஏழு தலைமுறைக்கு முந்தைய பெயர்களை தேடவேண்டுமானால் இங்கு இன்றும் தேடலாம். ஆனால் எப்படி நாடி ஜோசியம் ஒரு பணம் கொழிக்கும் வியாபாரமாகிப் போனதோ அப்படியே இந்த வம்சாவளி விவரங்களை வைத்து வியாபாரம் பண்ண ஒரு கும்பல் கிளம்பியிருப்பதுதான் வேதனை.

எங்கு நோக்கினும் பூஜைகளும், மந்திரங்களும், மணியோசைகளும், ருத்திராட்ச மாலைகளும், சாம்பிராணி புகையும், கஞ்சா சாமியார்களும் கூடவே சாமியாரிணிகளும், கும்ப மேளாக்களுமென இந்நகரம் இன்னும் புராதன வழக்கங்களுடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நவீனத்தின் தாக்கமும் இல்லாமலில்லை. இன்டர்நெட் பார்லர்களும், மூலிகை மசாஜ்களும், ருத்திராட்சக் கொட்டைகளின் பல்வேறு வடிவங்களும் (பஞ்சமுகி ருத்திராட்சமென ஒரு ஐட்டத்தை காட்டி ஏமாற்றிய ஒரு சாதுவிடமிருந்து தப்பித்து வருவதற்குள் டரியலாகி விட்டோம்) என வேகமாக நவீன மடைந்து வருகிறது.

No comments:

Post a Comment

Thank You...